Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

October 3, 2009

எஞ்சி நிற்பது மனிதம்தானே ..

அண்மையில் ஒரு நாள்..
சுட்டெரிக்கும் வெய்யில்
கந்தல்மூட்டை கிழவர் ஒருவர்
கொப்பளிக்கும் கால்களை
சாலையோரச் சாக்கடையில்
நனைத்து நனைத்து
நடந்தார் நகர்ந்தார்....

ஓடும் பேருந்திலிருந்து
ஒரு கரம் செருப்புகளிரண்டை
வீசக் கண்டேன்;
ஒன்று சாக்கடை நீரில்,
மற்றது எதிரில் வந்த
வாகனத்தின் மீது..
இயந்திர வாழ்க்கையிலும்
எஞ்சி நிற்பது மனிதம்தானே!

மனிதரை நேசிப்போம்
மதம், மொழி, இன பேதங்களுக்கப்பால்
மனிதரிடத்து மரங்களைப் பிரித்து
மனிதரை நேசிப்போம்
மனிதராய் வாழ்வோம்
இரத்தம் ஒரே நிறம்
இன்றேனும் புறப்படுவோம்
புதியதோர் உலகம் செய்வோம்!

என்(ண்) கவிதை...




என் கவிதையென
ஆணவமாய் தொடங்குவதாய்
எண்ண வேண்டாம்..

எண்ணும் எழுத்தும் கண்கள்
என்பார் வள்ளுவப் பெருந்தகை
கண்கள் இரண்டானாலும் காணும்
காட்சி ஒன்றென்பார் கவிஞர்..

எண்ணும் எழுத்தும்
கற்றுணர்ந்தவர் எவரும்
உயர்வர் என்பது மெய்யே..

எண்களுடன் வாழ்ந்து
எண்களாலே பிழைக்கும்
எங்களிலும் கவிஞர்
இருப்பதென்ன பிழையா ?

எண்ணி மாய்ந்திடும் எங்களுக்கும்
எண்ணக் குமைச்சல் உண்டென்பேன்
எண்ணி ஓய்ந்திடும் எங்களுக்கும்
எண்ண ஓய்ச்சல் என்றுமில்லை..

எண்களின் தொடக்கமே சுழியமே
எங்களின் தொடக்கமும் நீதான்
கண்டவரைப் பின்தொடரும் உனக்கேனும் மதிப்புண்டு
பின்தங்கி நின்றுவிட்டால் எம்நிலையோ வேதனை..

உன்னை உன்னோடு
குட்டினாலும், கழித்தாலும், பெருக்கினாலும், வகுத்தாலும்
எப்படி நீ நிலைமாராயோ
அப்படித்தான்
நாங்களும் மாறுவதில்லை..!